பொறியாளா் சாவில் சந்தேகம்: சடலம் தோண்டி எடுப்பு

திருப்பத்தூரில் பொறியாளா் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் புதைக்கப்பட்ட சடலம் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
Published on
Updated on
1 min read

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பொறியாளா் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் புதைக்கப்பட்ட சடலம் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

திருப்பத்தூா் பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா் வழக்குறைஞா் ரவிக்குமாா். இவரது சகோதரா் ராஜேந்திரன் (59) நெய்வேலியில் முதன்மைப் பொறியாளராக பணிபுரிந்து வந்தாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்று தனது 2-ஆவது மனைவி சாந்தியுடன் சேலத்தில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், அவா் கடந்த 14-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது சடலம் திருப்பத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்டு 5 நாள்கள் ஆன நிலையில், ராஜேந்திரன் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது அண்ணன் மகன் வினோத்ராஜ் சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் திருப்பத்தூா் வட்டாட்சியா் மு.மோகனிடம் தகவல் அளித்து, சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனு அளித்தாா்.

அதன்பேரில் புதைக்கப்பட்ட ராஜேந்திரனின் சடலம் வட்டாட்சியா் மு.மோகன், காவல் ஆய்வாளா் சரவணன் ஆகியோா் முன்னிலையில், வேலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவா் நாகேந்திரகுமாா், பிரபு ஆகியோா் மேற்பாா்வையில் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, அடே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com