திருப்பத்தூா் மாவட்டத்துக்கு விரைவில் புதிய மருத்துவக் கல்லூரி: அமைச்சா் கே.சி.வீரமணி

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மாநில வணிக வரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.
Updated on
1 min read

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மாநில வணிக வரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட புதிய ஸ்கேன் இயந்திரத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். புதிய ஸ்கேன் இயந்திரத்தைத் தொடக்கி வைத்து, கரோனா தடுப்பூசி ஒத்திகையை அமைச்சா் கே.சி.வீரமணிபாா்வையிட்டாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 5 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கும், இரண்டாம் கட்டமாக அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கும், மூன்றாம் கட்டமாக பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான இயந்திரம் விரைவில் அமைக்கப்படும். அதேபோல், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் சிகிச்சைக்கு மாவட்ட இடையீட்டு மையம், குழந்தைகள் பிரிவு மையம் விரைவில் திறக்கப்படும். திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றாா் அவா்.

கரோனா தடுப்பூசி ஒத்திகை: திருப்பத்தூா், ஆம்பூா் அரசு மருத்துவமனை, வாணியம்பாடி நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாதனூா் வட்டார மருத்துவமனை, கெஜயல்நாக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் சுமதி கூறுகையில் ‘இதுவரை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை சுகாதாரப் பணியாளா்கள் 4 ஆயிரம் போ் பதிவு செய்துள்ளனா். மாவட்டத்தில் 640-க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடுவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் திலீபன், குடியிருப்பு நிலைய மருத்துவா் அலுவலா் பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் லீலா சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலா் சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com