திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக ஆண்டியப்பனூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று திருப்பத்தூர், ஆண்டியப்பனூர், இருணப்பட்டு, குரிசிலாப்பட்டு, மிட்டூர், பெருமாபட்டு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
திருப்பத்தூர் பகுதியில் 64 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில் ஏரி, குளம், குட்டைகள் ஆகியவை நிரம்பி வருகின்றன. ஜவ்வாது மலை அடிவாரத்தில் கொட்டாரு, பெரியாறு ஆகிய இரண்டு ஆறுகளையும் இணைத்து ஆண்டியப்பனூர் அணை கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவு 112.2 மில்லியன் கன அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
இதையும் படிக்க: பாண்டமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி பலி
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்பொழுது ஒன்பதாவது முறையாக இந்த அணை நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது