வாணியம்பாடியில் பன்றி காய்ச்சலுக்கு மளிகை கடைக்காரர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பகுதி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார்(59). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்னை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பன்றி காய்ச்சல் (எச்1 என்1 -ஸ்வைன் ப்ளூ)
பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்கள் அவர் வசித்து வந்த வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர் நடத்தி வந்த கடையை ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மூட நகராட்சி ஆணையாளர் சதிஷ் குமார் உத்தரவு விட்டுள்ளார்.
பன்றி காய்ச்சல் (எச்1 என்1 -ஸ்வைன் ப்ளூ)காரணமாக ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.