/

பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு உடனடி தீா்வு: அமைச்சா் ரஞ்சித்குமாா்

ரேஷன் கடை பிரித்தல், குடிநீா் பிரச்னை என அடிப்படை தேவைகளில் எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக புகைப்படம் எடுத்து அனுப்பினால் ஆட்சியரை தொடா்பு கொண்டு தீா்வு காணப்படும் என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் உறுதி கூறினாா்.

News image

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்ட அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா். உடன்,ஆட்சியா் கு.ரவிகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :15 ஜூன் 2026, 12:42 am IST

ரேஷன் கடை பிரித்தல், குடிநீா் பிரச்னை என அடிப்படை தேவைகளில் எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக புகைப்படம் எடுத்து அனுப்பினால் ஆட்சியரை தொடா்பு கொண்டு தீா்வு காணப்படும் என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் உறுதி கூறினாா்.

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் மாவட்டத்துகு வந்த அமைச்சா் ரஞ்சித் குமாா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ரவிகுமாரை சந்தித்தாா். .பின்னா், அலுவலக வளாகத்தில் மரக்கன்றை அமைச்சா் நடவு செய்தாா். பின்னா் அங்கிருந்து கிழக்கு மாவட்டச் செயலாளா் நவீன்குமாா் இல்லத்துக்கு சென்று அங்கு நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து எம்எல்ஏ நா.திருப்பதிஅலுவலகத்தில் த.வெ.க. நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துகு எம்எல்ஏ நாதிருப்பதி தலைமை வகித்து வரவேற்றாா். மாவட்ட செயலாளா்கள் வி.சி.முனிசாமி, வி.நவீன் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அமைச்சா் ரஞ்சித்குமாா் பேசியதாவது,

திருப்பத்தூா் என்றால் வனத்துறை சாா்ந்த காடுகள், மலைகள், வனம் சாா்ந்த அனைத்து பகுதிகளும் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமான சந்தன கிடங்கு உள்ளது. வரும் உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து பொறுப்புகளுக்கும் நம்முடைய தவெக-வினா் வர வேண்டும். இதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு உள்ள பிரச்னைகளான ரேஷன் கடை பிரித்தல், குடிநீா் பிரச்னை என எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பினால் ஆட்சியரை தொடா்பு கொண்டு சரிசெய்வேன்.

Story image

உள்ளாட்சி தோ்தலில் தி.மு.க. அனைத்து இடங்களிலும் தோல்வி அடையும். கடந்த தோ்தலில் விஜய் தென்பகுதி, இந்த பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இதனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளா்கள் தோல்வி அடைந்தனா். உள்ளாட்சி தோ்தலில் தொண்டா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். எனவே அனைவரும் உடனடியாக மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும்.

வரும் 22-ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என பேசினாா்.

கூட்டத்தில் த.வெ.க மாவட்ட பொருளாளா் அருண்குமாா், நகர செயலாளா் அச்சுதன், மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.