ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் சாலை வசதி இல்லாமல் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்லும் பொது மக்களும் மாணவர்களும் செல்லுகின்றனர்.
வடகிழக்கு பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்ததால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக அவதிப்பட்டு வந்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஆரணி அடுத்த மங்கலம், புதுப்பாளையம், காரணி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக வெள்ளத்தை கடக்க முடியாமல் சுமார் 15 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி வந்தனர்.
இந்த கிராமங்களைச் சேர்ந்த அனைவரும் ஆரணி பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு வந்து செல்வார்கள். ஆரணி ஆற்றில் வெள்ளம் இருந்ததால் அவர்களால் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மங்கலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆரணி ஆற்றில் படகு போக்குவரத்து செயல்படுத்தத் தொடங்கியது. பொதுமக்களும் மாணவர்களும் ஆரணி வந்து செல்வது ஏதுவாக இருந்தது. தற்போது மழை குறைந்து ஆரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் படகுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க- ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம்: முதல்வர் துவக்கிவைத்தார்
இதனால் பாலம் இல்லாத மங்களம் கிராம மக்கள் தண்ணீரைக் கடந்து வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் ஊராட்சி நிர்வாகம் மணல் மூட்டைகளை அடுக்கி ஆற்றில் பொதுமக்கள் செல்ல வழிவகை செய்து கொடுத்தது. இருப்பினும் இது ஆபத்தான முறை என்பதால் பொதுமக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்து செல்கின்றனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக தரைப்பாலம் இல்லாமல் இருப்பதும் மழைக்காலங்களில் அதிக தூரம் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டிய சூழலில் இருப்பதாகவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.