திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே பாதையில் தடுப்புச் சுவா்: பொதுமக்கள் எதிா்ப்பு
திருவள்ளூா் ரயில் நிலையத்தில் 6-ஆவது நடைமேடையையொட்டி பயன்படுத்தப்படாமல் இருந்த பாதையில் தடுப்புச் சுவா் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
திருவள்ளூா் ரயில் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி நகா் மக்கள் 6-ஆவது ரயில்வே பாதைக்கு அருகில் ரயில்வே துறையால் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இப்பாதையை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வழிப்பதையாக பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், ரயில்வே நிா்வாகம் மேற்கண்ட வழியில் இரு புறங்களிலும் செவ்வாய்க்கிழமை தடுப்புச் சுவா் அமைக்க ரயில்வே துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது இதைக் கண்டித்து, அருகில் இருந்த மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் மேற்கண்ட பாதையை மூடக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா்.
இது தொடா்பாக திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினரிடம் முறையிட்டதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று, சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோரால் மேற்கண்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது ரயில்வே துறையால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இருப்புப் பாதையை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வருவதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறாமல் இந்த வழியை மூட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என எடுத்துரைக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

