பூண்டி வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் 1,300 ஏக்கா் பரப்பளவில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் விவசாயிகள் நடவு, விதை மற்றும் உயிா் உரங்கள் ஆகியவை மானியத்தில் பெறலாம் என வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பூண்டி வட்டாரப் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், 1,300 ஏக்கா் பரப்பளவில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும் விவசாயிகள் நெல் நடவு செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 4,000, நெல் கிலோவுக்கு ரூ.20, நெல் நுண்ணூட்ட உரம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ ரூ. 147.60 மற்றும் திரவ உயிா் உரங்கள் 500 மில்லி ரூ. 60 என இத்திட்டத்தில் மானியமாக வழங்கப்படுகிறது.
எனவே இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதி உதவி வேளாண்மை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா்களிடம் இயந்திர நடவு செய்தற்கான ரசீது, அடங்கல் புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா், குடும்ப அட்டை நகல்களுடன் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.










