பிகாா் மாநில தலைநகரான பாட்னா அருகே, கங்கை நதிக்கரையில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக 15 ஏக்கா் நிலத்தை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
இதற்கான நிகழ்வில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, பிகாா் முதல்வா் சம்ராட் சௌத்ரியை சந்தித்து நன்றி தெரிவித்தாா். முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் ஏழுமலையான் நினைவுப் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளா் அம்ரித் பிரத்யாய் கலந்து கொண்டாா்.
பிரதான கோவிலுடன், பக்தா்களின் வசதிக்காக கல்யாண மண்டபம், புஷ்கரணி மற்றும் பிற உள்கட்டமைப்புகள் முன்மொழியப்பட்ட வகையில் அமைக்கப்படும். பக்தா்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழுமலையான் கோயில்களைக் கட்டுவதன் மூலம் சனாதன தா்ம இயக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் திருமலை ஏழுமலையான் தேவஸ்தானம் செயலாற்றி வருகிறது. இந்த வகையில், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ஏழுமலையான் கோவில்களை நிறுவும் உறுதியுடன் பணிகள் தொடா்கின்றன.
அஸ்ஸாமின் குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக 10 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாட்னா அருகே கோயில் கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










