குடியாத்தம் அருகே அம்மிக் கல்லால் அடித்து லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்பூர் வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வேலன் (40). லாரி ஓட்டுநரான இவர், குடியாத்தம் பாக்கத்தை அடுத்த செல்வபெருமாள் நகரில் உள்ள தனது சகோதரி லோகேஷ்வரி வீட்டில் தங்கி அவருக்குச் சொந்தமான லாரியை ஓட்டி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி நிர்மலாவுடன் வேலனுக்கு தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் வேலனும், நிர்மலாவும் இருந்தபோது சசிகுமார் வந்தாராம். அப்போது, ஏற்பட்ட தகராறில் சசிகுமார் அம்மிக்கல்லால் தாக்கியதில் வேலன் பலத்த காயமடைந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, சசிகுமாரும், நிர்மலாவும் விபத்தில் வேலன் காயமடைந்ததாகக் கூறி அவரை ஆட்டோவில் ஏற்றி வந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வேலன் ஏற்கெனவே இறுந்து விட்டதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக பரதராமி போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாக்கம் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலன் அம்மிக் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சசிகுமார், நிர்மலா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.