எதிர்கால லட்சியத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளி மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி அறிவுரை வழங்கிப் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, இளம் தளிர் அமைப்பு, ரோட்டரி பிரைடு, வேங்கிக்கால் ரோட்டரி, அக்கார்டு அறக்கட்டளை இணைந்து குழந்தைகள் தின விழாவை கொண்டாடின. திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டக் கல்வி அலுவலர் அ.உஷாராணி, வேலூர் ரோட்டரி சங்க மாணவர் பயிற்றுநர் மகாலட்சுமி, அரசு மருத்துக் கல்லூரிப் பேராசிரியர் செந்தில்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி, சார்பு நீதிபதி கே.ராஜ்மோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். விழாவில், நீதிபதி ஜி.மகிழேந்தி பேசியதாவது: மாணவர்கள் அனைவரும் தங்களது எதிர்கால லட்சியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். உங்களிடம் மறைந்துள்ள ஆளுமைகளை வெளிக்கொணர வேண்டும்.
நல்ல புத்தகங்களை வாசிக்கப் பழகுங்கள். இதன் மூலம் வாழ்க்கையின் பல நல்ல தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், உடற்கல்வி ஆய்வாளர் முனியன், துணை ஆய்வாளர் புகழேந்தி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, பள்ளி துணை ஆய்வாளர் ஜி.குமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.