இன்றைய காலகட்டத்தில் கவர்ச்சியான விளம்பரங்களைப் பார்த்து ஏமாறக் கூடாது என்றும், நாம் வாங்கும் பொருள்களின் தரம், காலாவதி தேதியை சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் நுகர்வோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, மகளிர் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் நுகர்வோரே. நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு அவசியம். நாம் எந்தப் பொருளை வாங்கினாலும் அதன் உற்பத்தி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். காலாவதி தேதியைப் பார்த்து பொருள்களை வாங்க வேண்டும். இன்றைய காலத்தில் கவர்ச்சியான விளம்பரங்களைப் பார்த்து ஏமாறக் கூடாது என்றார்.
கூட்டத்தில் பேசிய சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன், திருவண்ணாமலை மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள மெழுகு பூசப்பட்ட பிளாஸ்டிக் டீ குவளைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.
விழிப்புணர்வுக் கண்காட்சி: முன்னதாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வுக் கண்காட்சியை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி திறந்து வைத்துப் பார்வையிட்டார். இதில், முத்திரை இல்லாத எடை அளவுகள், முறைகேடான எடை அளவுகள், ஆய்வக எடை அளவுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
பாராட்டுச் சான்றுகள்
அளிப்பு: விழாவில், சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன், பெட்காட் அமைப்பின் மாநில துணைத் தலைவரும், மாவட்ட நுகர்வோர் மையத் தலைவருமான இ.அன்பு, மாவட்ட நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் எம்.வெங்கடேசன், பெட்காட் அமைப்பின் மாவட்டச் செயலரும், வழக்குரைஞருமான ப.கி.தனஞ்செயன் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
விழாவில், நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சு.ஜெயந்தி, நலப் பணிகள் இணை இயக்குநர் (பொ) து.பாண்டியன், திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலர் இரா.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், நுகர்வோர் மன்ற உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.