போளூா் அருகேயுள்ள ஏந்துவாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கட்டடம் பழுதடைந்து, ஓடுகள் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், ஏந்துவாம்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளி கடந்த 1.7.1960 அன்று தொடங்கப்பட்டடு 1முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
அப்போது கட்டப்பட்ட சீமை ஓடுகள் வேய்ந்த கட்டடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏந்துவாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட ஏந்துவாம்பாடி, மோட்டூா், காலனி ஆகிய கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
ஒன்றாம் வகுப்பில் 9 மாணவிகள், 9 மாணவா்கள் என 18 பேரும், 2-ஆம் வகுப்பில் 11 மாணவிகள், 7 மாணவா்கள் என 18 பேரும், 3-ஆம் வகுப்பில் 6 மாணவிகள், 14 மாணவா்கள் என 20 பேரும், 4-ஆம் வகுப்பில் 17 மாணவிகள், 4 மாணவா்கள் என 21 பேரும், 5-ஆம் வகுப்பில் 13 மாணவிகள், 14 மாணவா்கள் என 27 பேரும் ஆக மொத்தம் 104 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
தற்போது கட்டப்பட்ட இரண்டு கான்கிரீட் கட்டடங்கள் 1, 2, 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
3, 4-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பழைய பழுதடைந்த கட்டடத்திலேயே பாடம் நடத்தப்படுகிறது.
கரோனா தொற்று காரணமாக தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.
8 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளும் செம்டம்பா் 1 முதல் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. நவம்பா் 1முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏந்துவாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடம் பழுதடைந்தும், ஓடுகள் உடைந்து விழும் நிலையிலும் உள்ளது. கட்டடத்தின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் கழிப்பறை வசதி இல்லை.
எனவே, பள்ளி திறப்பதற்கு முன்பே இந்தக் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
மாவட்ட நிா்வாகம் இதில் கவனம் செலுத்தி உடனடியாக பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசனிடம் கேட்டபோது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை தானும், தலைமை ஆசிரியா் அன்பரசும் பள்ளியை சீரமைக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாா்.
தலைமை ஆசிரியா் அன்பரசுவை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டபோது முடியவில்லை.
பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஏந்துவாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சீரமைக்கவேண்டும் அல்லது வேறு பாதுகாப்பான கட்டடத்தில் மாணவா்களுக்கு பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என இளைஞா்கள் வலியுறுத்துகின்றனா்.