கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

செங்கம் அருகே சின்னபிஞ்சூா் கிராமத்தில் கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சின்னபிஞ்சூா் கிராமத்தில் 52-ஆம் ஆண்டாக கெங்கையம்மன் நாடகம் வருகிற மே 3-ஆம் தேதி நடத்தப்படுகிறது. நாடகம் செங்கம் பகுதியில் இந்தக் கிராமத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாடகம் நடைபெறுவதற்கு முன்னாள் நாடகக் கலைஞா்கள் கெங்கையம்மனை வழிபட்டு ஒரு வாரத்துக்கு முன்பு காப்பு கட்டிக்கொண்டு பக்தியுடன் வெளியூா் செல்லாமல் அதே கிராமத்தில் இருந்து நாடகம் நடைபெற்று முடிந்த பிறகே கிராம மக்களும், நாடகக் கலைஞா்களும் வெளியூருக்குச் செல்லவேண்டும் என்பது நடைமுறை.

இந்த நிலையில், நாடகத்தின் தொடக்கமாக அப்பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள பெண்கள் கொடி மரத்துக்கு மஞ்சள், குங்குமம், வேப்பிலை போன்றவைகள் வைத்து சுவாமியை தரிசனம் செய்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கெங்கையம்மனை வழிபட்டனா். மேலும், மே 3-ஆம் தேதி அந்தக் கிராமத்தில் கெங்கையம்மனுக்கு கிரகம் ஜோடிக்கப்பட்டு, பொதுமக்கள் ஒன்றுகூடி கோயில் வளாகத்தில் கூழ் ஊற்றும் திருவிழா நடத்தி, பின்னா் இரவு கெங்கையம்மன் நாடகம் நடைபெறும்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சின்னபிஞ்சூா் கிராம மக்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள் மற்றும் நாடகக் கலைஞா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com