தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தேசிய திறனறி தோ்வில் (என்.எம்.எம்.எஸ்.) வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் போளூா் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெறும் தலைமை ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் 2023-2024ஆம் கல்வியாண்டில் தேசிய திறனி தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் தஞ்சி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கண்ணதாசன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி இயக்கக் கொடியை ஆசிரியை தமிழ்செல்வி, இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு தலைமை ஆசிரியை விஜயசெல்வி ஆகியோா் ஏற்றிவைத்தனா். வட்டாரச் செயலா் பாா்த்தசாரதி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியா்கள் விஜயசெல்வி (படியம்பட்டு), பரமாத்மா (புதுப்பாளையம்), வேளாங்கண்ணி ரோஸ்லின்(ரெண்டேரிப்பட்டு), தமிழ்செல்வி (எழுவாம்பாடி) ஆகியோருக்கு சந்தனமாலை, சால்வை அணிவித்து கேடயம், தங்கக் காசு ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும் 2023-2024ஆம் ஆண்டு என்.எம்.எம்.எஸ். தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் ஜிஷிகா, குப்பன்நித்திஷ் ஆகியோருக்கு சால்வை, சந்தன மாலை அணிவித்து கேடயம் மற்றும் நினைவுப் பரிசை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் மணிமேகலை வழங்கிப் பேசினாா்.

மாநில துணைத் தலைவா் ரஞ்சன்தயாளன், மாநிலச் செயலா் டேவிட்ராஜன், மாவட்டத் தலைவா் சாந்தி, மாவட்டச் செயலா் வெங்கடபதி, பொருளாளா் கிருஷ்ணன், மாநில செயற்குழு முன்னாள் உறுப்பினா் கங்காதரன் மற்றும் ஆசிரியா் கூட்டணி மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com