மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது
வந்தவாசி அருகே மகளை கடத்தி ஆண் நண்பருக்கு கட்டாயத் திருமணம் செய்து வந்ததாக, தாய் மற்றும் திருமணம் செய்த ஆண் நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் சித்ரா (42). இவரது கணவா் ஏழுமலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவா்களது மூத்த மகள் திருமணமாகி காஞ்சிபுரத்திலும், 18 வயது இளைய மகள் சித்ராவுடன் உள்ளனா்.
சித்ராவுக்கும் இதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கந்தன் (31) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.
இந்த நிலையில், தாய் மற்றும் தங்கை மாயமானதாக கீழ்க்கொடுங்காலூா் போலீஸில் கடந்த 14-ஆம் தேதி மூத்த மகள் புகாரளித்தாா். போலீஸ் விசாரணையில் சித்ரா, அவரது இளைய மகள் மற்றும் கந்தன் ஆகிய மூவரும் கேரள மாநிலத்தில் தேயிலை தோட்டத்தில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், சித்ரா, கந்தன் ஆகிய இருவரும் சோ்ந்து இளைய மகளை கேரளத்துக்கு கடத்திச் சென்றதும், அங்கு கந்தன் இளைய மகளுக்கு தாலி கட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சித்ரா, கந்தன் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.
