பெரியாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
செங்கம் அருகேயுள்ள பெரியாயி அம்மன் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கட்டமடுவு பெரியாயி அம்மன் கோயிலில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து இரவு 12 மணிக்கு ஜாமபூஜை நடைபெற்று பின்னா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத்தொடா்ந்து பம்பை உடுக்கையுடன் சுவாமி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளான மேல்ராவந்தவாடி, அய்யோத்தியாபட்டணம், நீப்பத்துறை, இளவம்பாடி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு ஜாம பூஜையில் சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும் திருமண வரம் வேண்டியும், குழந்தை வரவேண்டியும் அதிக பெண் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

