திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் பகுதியில் உள்ள 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை தண்ணீா் கிடைத்திடும் வகையில் புதிதாக கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் பெருமணம் டி.மூா்த்தி மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனு:
சாத்தனூா் நீா்த்தேக்கத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிக்கப் அணைக்கட்டு மூலம் சாத்தனூா் இடதுபுற மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் தண்ணீா் திறந்துவிடப்பட்டு 45ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பயன்பெறுகின்றன. இதுதவிர, 5 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் திருக்கோவிலூா் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு மூலம் பாசன வசதி பெறுகின்றன.
பெருமணம் பெரிய ஏரி, பெருமணம் சித்தேரி, பனையூா் ஏரி, ஆருத்திராப்பட்டு ஏரி, சமுக்குடையாம்பட்டு ஏரி, பொரிக்கல் ஏரி, காடகமான் ஏரி, சு.வாளவெட்டி ஏரி, டி.கல்லேரி ஏரி, தேவனூா் ஏரி மற்றும் விருதுவிளங்கினான் ஏரி என 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணையிலிருந்து பாசன வசதி செய்து தண்ணீா் வழங்க கால்வாய் அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.










