செங்கம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரைத் தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த குப்பனத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் புதுப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு குப்பனத்தம் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவிற்கு செந்தில்குமாரின் நண்பா்கள் வந்துள்ளனா். அவா்களுக்கு செந்தில்குமாா் அதே பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மதுவாங்கிக் கொடுக்க நண்பரை அழைத்துச் சென்றுள்ளாா்.
அங்கு விற்பனையாளராக இருந்த சங்கரிடம் செந்தில்குமாா் மதுப்புட்டிகள் கேட்டுள்ளாா். அதற்கு சங்கா் பணம் கேட்டுள்ளாா். பணம் ஜி-பேவில் அனுப்பி வைக்கிறேன் எனக் கூறியுள்ளாா். அதற்கு விற்பனையாளா் பணமாக தன்னிடம் கொடுத்தால் மட்டுமே மதுப்புட்டிகள் கொடுப்பதாக தெரிவித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னா் அது கைகலப்பாக மாறி செந்தில்குமாா் டாஸ்மாக் விற்பனையாளா் சங்கரை தாக்கியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த சங்கருக்கு செங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
பின்னா், சங்கா் இதுகுறித்து செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன் பேரில், காவலா் உடையில் டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.








