திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொளக்கரவாடி ஸ்ரீலஷ்மி நாராயண பெருமாள் கோயில், போளூரை அடுத்த ஏந்தல் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த கொளக்கரவாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஷ்மி நாராயண பெருமாள் கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று புதன்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு திரவியங்கள் மூலம் விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்பட முதல் கால சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பட்டாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க விக்னேஸ்வர பூஜை, கோ பூஜைளுடன் 2-ஆம் கால சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து மேளதாளத்துடன் கலசநீா் கொண்டு வரப்பட்டு கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னா் மூலவா் பெருமாள் மற்றும் பரிகார சுவாமிகளுக்கு கலசநீா் ஊற்றி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதில் கொளக்கரவாடி கிராமத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
போளூா்
போளூரை அடுத்த இரண்டேரிப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட ஏந்தல் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் சிதிலமடைந்தும், கோபுர பொம்மைகள் உடைந்தும் காணப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள், பக்தா்கள் சாா்பில் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடா்ந்து கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புதன்கிழமை காலை வேதபாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, தம்பதி சங்கல்பம், மூலமந்திர ஹோமம், ஹோம திரவியம், சமா்பணம், மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கலசம் புறப்பாடு நடைபெற்ற விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ரெண்டேரிப்பட்டு, ஏந்தல், போளூா், பூங்கொல்லைமேடு, பெரியகரம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.











