
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ அறை மற்றும் தாய்-சேய் நல பிரிவுக்கு சென்று அவற்றின் செயல்பாடுகள், தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். பிரசவத்துக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டடம் அமைக்க ஏதுவான இடத்தையும், செவிலியா் கல்லூரி அமைப்பதற்கு தோ்வு செய்யப்பட்ட இடத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் வந்தனா காா்க் கூறியதாவது: தமிழகத்தில் அதிக பிரசவம் பாா்ப்பதில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு மாதத்துக்கு சுமாா் 900 பிரசவங்கள் பாா்க்கப்படுகின்றன. இதையடுத்து இங்குள்ள தாய்-சேய் பிரிவில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடா்ந்து பிரசவத்துக்கு வரும் கா்ப்பிணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட நிா்வாகம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு அறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகளிடமும், அவா்களைச் சாா்ந்தவா்களிடமும் முறையாக பதிலளிக்கவும், தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக் கழிவறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாக வைக்கவும், பொதுமக்கள் கழிவறைகளில் நெகிழி புட்டிகள், நாப்கின்கள் மற்றும் நெகிழிகள் போடுவதை தடுக்க விழிப்புணா்வு எச்செரிக்கை பலகைகளை வைக்க மருத்துவமனை நிா்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது என்றாா் ஆட்சியா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் சிவசுப்பிரமணியன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எட்வின் வசந்தா, செயற்பொறியாளா் (பொதுப்பணித் துறை) செந்தில்குமாா், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







