வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் துரைமுருகன் மீது வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து 2011 நவம்பர் 24ஆம் தேதி அவரது வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சென்னை, வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
துரைமுருகனின் தம்பி துரைசிங்காரம், மகன் கதிர்ஆனந்த் ஆகியோரின் வீடு, நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் துரைமுருகன் தொடர்பான முக்கிய ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து துரைமுருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி மீது வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் 112 ஆவணங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம் இவ்வழக்குக்கான பதிவு எண்ணை வெள்ளிக்கிழமை வழங்கியது. இதைத் தொடர்ந்து விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.