அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு விழிப்புணர்வுப் பணிகளை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் முகாமிட்டு தினமும் ஆய்வு செய்து வருகிறார்.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், நவம்பர் 2-ஆம் தேதி வரை சிறப்பு விழிப்புணர்வுப் பணிகளை அனைத்து நகராட்சிகளிலும் மேற்கொள்ள மாநில சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டார். இப்பணிகளை உடனிருந்து ஆய்வு செய்யுமாறு வருவாய்த் துறையினருக்கும் மாநில அரசு ஆணையிட்டது.
அதன்படி, நகராட்சி சுகாதாரத் துறையினர் தினமும் 3 வார்டுகளைத் தேர்வு செய்து டெங்கு சிறப்பு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அரக்கோணம் 24-ஆவது வார்டு ஏபிஎம் சர்ச் பகுதி, 8-ஆவது வார்டு காலிவாரிகண்டிகை, 2-ஆவது வார்டு மாதவன் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், வீடு வீடாகச் சென்று நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல், வீடுகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருள்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
இதில், நகராட்சி ஆணையர் கோ.கமல
குமாரி, சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் தேவராஜ் உள்ளிட்டோரும் ஈடுபட்டனர். இப்பணிகளை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் கஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார். அவருடன் வட்டாட்சியர் வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.