கடுமையான விலை வீழ்ச்சி காரணமாக வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிரை அறுவடை செய்ய முடியாமல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்களில் பரவலாக வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. வெற்றிலைத் தோட்டத்தில் கொடி படர்வதற்காக ஊடு பயிராக அகத்திக் கீரை பயிரிடப்படுகிறது.
ஆம்பூர் அருகே சாத்தம்பாக்கம், ரெட்டிமாங்குப்பம், கீழ்முருங்கை, வெங்கிளி, ஜமீன், தோட்டாளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 100 ஏக்கருக்கும் மேலாக வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது.
திருமண நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், விசேஷ நாள்களில் கோயில் மற்றும் வீடுகளில் நடைபெறும் பூஜைகளுக்கு வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. தினமும் வெற்றிலையை கடைகளில்
இருந்து பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். வெற்றிலை கடந்த பல மாதங்களாகவே கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.1-க்கு 2 வெற்றிலை கூட விற்பனை
செய்யப்பட்டது. ஒரு கவுளி அதாவது 100 வெற்றிலை கொண்ட கட்டு ஆம்பூர் பகுதி கடைகளில் ரூ. 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது விவசாயிகளிடமிருந்து முகவர்களும், வியாபாரிகளும் வாங்கும் வெற்றிலை மிகவும் குறைந்த விலைக்கு
வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு கவுளி விலை ரூ. 6 முதல் 10 வரை விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
விலை வீழ்ச்சி காரணமாக ஆம்பூர் பகுதி நிலங்களில் பயிரிடப்பட்ட வெற்றிலையை அறுவடை செய்வதற்கான தொழிலாளர்களுக்கு ஆகும் செலவுக்கு கூட கட்டுப்படியாகாது எனக் கருதி விவசாயிகள்
பயிரிடப்பட்ட வெற்றிலையை அறுவடை கூட செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் வெற்றிலை முற்றிப்போய் கருகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து ஆம்பூர் பகுதி விவசாயி சிக்கந்தர் கூறியது: வெற்றிலை விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்படும் விற்பனை விலை மிகவும் குறைவாக உள்ளது. அதனால் அறுவடை செய்ய வரும்
தொழிலாளர்களுக்கு வழங்கும் கூலி கூட, விற்பனை செய்வதால் கிடைக்கும் பணத்துக்கு கட்டுப்படியாகாது. அதனால் அறுவடை செய்யாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.
ஆனால் கடைகளில் அதிக விலைக்கு வெற்றிலை விற்பனை செய்யப்படுகிறது. வெற்றிலை பயிருக்கு காப்பீடும் கிடையாது. மேலும் வெற்றிலை பயிர் செய்வதற்கு இயற்கை உரம் தான்
பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதற்கும் அதிக செலவாகிறது. இத்தகைய காரணத்தால் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள், அதற்கான சரியான விலை கிடைக்காமல் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு அதிகமாக வெற்றிலை விற்பனைக்காக வந்துள்ளதும் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றார் அவர்.
வெற்றிலை விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.37 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: காலக்கெடு நிா்ணயிக்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்

நாட்டில் டிராக்டா் விற்பனை விறுவிறுப்பு

கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு வேதாந்தா ரூ.62,722 கோடி பங்களிப்பு!





