திருக்குறள் போல் போற்றப்பட வேண்டிய செந்நூல் தொல்காப்பியம்: துணைவேந்தர் க.முருகன்
திருக்குறள் போல் போற்றப்பட வேண்டிய செந்நூல் தொல்காப்பியம் என்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் பேசினார்.
திருவலத்தை அடுத்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆய்வாளர் மன்றம் சார்பில் "மெய்ப்பாட்டியல் நோக்கில் தமிழ் இலக்கியங்கள்' என்ற தலைப்பில் பல்கலைக்கழக பல்நோக்கு கலையரங்கில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
இதைத் தொடங்கி வைத்து துணைவேந்தர் க.முருகன் பேசியதாவது:
ஒருவர் விருப்புக் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் சொல்லாலும், செயலாலும் காட்டுவதற்கு முன்னரே முகம் காட்டி கொடுத்துவிடும்.
இது மெய்ப்பாட்டின் வெளிப்பாட்டை உணர்த்தும் செயலாகும். மெய்ப்பாடு குறித்து உலகப் பொதுமறையாம் திருக்குறளிலும், தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் கூறப்பட்டுள்ளது. எனவே திருக்குறள் போல் போற்றப்பட வேண்டிய, ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது தொல்காப்பியம் என்றார்.
மதுரை தமிழ் நாடக மையத்தின் நிறுவனரும், திரைப்பட நடிகருமான சண்முகராஜா தமிழ் இலங்கியங்களில் மெய்ப்பாட்டியல் குறித்து சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கிற்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி முன்னிலை வகித்தார். தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் ம.செந்தில் குமார் வரவேற்றார். தமிழ்த் துறை ஆய்வாளர் மன்ற மாணவர்கள் சு.ராஜ்குமார், கோ.கவிதா, ப.ராகசுதா, செ.மகாலட்சுமி, அ.தேவி, சு.தமிழரசி, க.சசிகலா ஆகியோர் பதிப்பாசிரியர்களாகக் கொண்ட மெய்ப்பாட்டியல் நோக்கில் தமிழ் இலக்கியங்கள் என்ற 121 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியிட்டப்பட்டது.
இதில், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் ஜெயராமன், திரைப்பட இயக்குநர் ப.ஆனந்த், பேராசிரியர்கள் ஜெகதீசன், அ.ராஜசேகர் மற்றும் தமிழ்த் துறை ஆய்வு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
