தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மலைக் கிராம மக்களின் தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றுவோம்: அமைச்சர் வீரமணி பேச்சு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், மலைக் கிராம மக்களின் தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்று மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பேசினார்

Updated On :21 மே 2018, 6:13 pm

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், மலைக் கிராம மக்களின் தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்று மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பேசினார்.
திருப்பத்தூர் சுகாதார வட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மலைக் கிராமமான புங்கம்பட்டு நாடு ஊராட்சியில் புதிய கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:
தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அதில் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க திட்டத்தைச் செயல்படுத்திக் காட்டினார். தமிழகத்தில் சுகாதாரத் துறையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகையான மருத்துவ வசதிகளை ஏழை, எளிய மக்கள் பெற்றுவருகிறார்கள் என்றால் அது மிகையாகது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு தற்போது ரூ. 18 ஆயிரம் நிதியுதவி, பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா பெட்டகம், சத்தான மாத்திரைகள், அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு வசதி போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை மருத்துவத் துறையில் கொடுத்துள்ளார்.
நான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் மத்திய அரசிடமிருந்து 128 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெறப்பட்டன. அவற்றில் வேலூர் மாவட்டத்துக்கு மட்டும் 28 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெறப்பட்டன.
மலைக் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று புதூர்நாடு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கை அறையுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. தற்போது புங்கம்பட்டுநாடு கிராமத்தில் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையம் தற்போது தற்காலிக கட்டடத்தில் இயங்கும். விரைவில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு அந்தக் கட்டடத்தில் நிரந்தரமாக இயங்கும்.
இங்கு மருத்துவப் பணியில் 2 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 1 மருந்தாளர் மற்றும் 2 துப்புரவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையின் வாயிலாக புங்கம்பட்டு நாடு ஊராட்சியில் உள்ள சுமார் 4,500-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலைக் கிராம மக்களின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்வோம் என்றார் அவர்.
விழாவுக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லத்தம்பி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் கோவி.சம்பத்குமார், ரமேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தேவபார்த்தசாரதி, மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.