பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சுற்றுலாத் தலமாகும் ஆண்டியப்பனூர் அணை: பணிகள் தீவிரம்

ஆண்டியப்பனூர் அணையை சுற்றுலாத்தலமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 7:11 am IST

ஆண்டியப்பனூர் அணையை சுற்றுலாத்தலமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் ஒன்றாகத் திகழ்கிறது. திருப்பத்தூரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் இந்த நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. ஜவ்வாது மலையில் இருந்து கொட்டாறு மற்றும் பெரியாறு எனும் இரு ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் ஆண்டியப்பனூர் அணையை வந்தடைகிறது. இந்த அணை 112.2 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். அணையின் உயரம் 8 மீட்டர்.
ஆண்டியப்பனூர் அணை நிரம்பிய பின் வெளியேறிச் செல்லும் நீர், சின்னசமுத்திரம், வெள்ளேறி, மாடப்பள்ளி ஏரி வழியாகச் சென்று, அங்கிருந்து இரு கிளைகளாகப் பிரிந்து, ஒரு கிளையில் செலந்தம்பள்ளி, கோனேரிக்குப்பம், கம்பளிகுப்பம், முத்தம்பட்டி, ராச்சமங்கலம்,  பசலிக்குட்டை உள்ளிட்ட ஏரிகள் வழியாகச் சென்று பாம்பாற்றைச் சென்றடைகிறது. அதேபோல், மற்றொரு கிளையாக  கணமந்தூர், புதுக்கோட்டை ஏரிகள் வழியாகச் சென்று திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி, பின்னர் பாம்பாற்றில் சென்றடைகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையில் அனைத்து ஏரிகளும் நிரம்பின. அதேபோல், 2017-18-ஆம் ஆண்டு பெய்த மழையில் திருப்பத்தூர் பெரிய ஏரி ராச்சமங்கலம் ஏரி நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது வாணியம்பாடி வட்டத்துக்கும், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கும் உள்பட்டதாகும்.
இந்த அணை இரண்டு ஆறுகளுக்கும் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டு 2007-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது ஆண்டியப்பனூரில் உள்ளது. இது பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது. இந்த அணையின் திட்ட இல்லம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஆண்டியப்பனூர் அணைப் பகுதியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தொகுதி எம்எல்ஏவும், மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீல், ஆண்டியப்பனூர் அணையை சுற்றுலாகத் தலமாக்க தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதை ஏற்று, கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் "ஆண்டியப்பனூர் அணைப் பகுதி சுற்றுலாத் தலமாக்கப்படும்' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, இந்த அணையை சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
படகு இல்லம்: தற்போது படகு இல்லம், உணவகம் (கேண்டீன்), கழிப்பறை கட்டடப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து திருப்பத்தூர் பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் பி.குமார் கூறியது: 
ஆண்டியப்பனூர் அணையை சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. தற்போது முதல் கட்டமாக படகு இல்லம் அமைப்பது, உணவகம் (கேண்டீன்), கழிப்பறை கட்டுவது ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 6 மாத காலத்துக்குள் இப்பணி முடிந்துவிடும். அதையடுத்து, விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்கா, சிலைகள், நடைபயிற்சிக்கான சாலை ஆகியவற்றை அமைக்கும் பணி தொடங்கப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து பயன்பாட்டு வரும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.