நாட்டிலேயே முதன்முதலில் சொந்தமாக ரயில் இயக்கிய தமிழா்!

தனியாருக்கு ரயில்களை இயக்கும் உரிமையை அளிக்கத் திட்டமிட்டுள்ள இந்திய ரயில்வே வாரியத்தின் முடிவுக்கு
நம்பெருமாள்செட்டியாா்.
நம்பெருமாள்செட்டியாா்.

தனியாருக்கு ரயில்களை இயக்கும் உரிமையை அளிக்கத் திட்டமிட்டுள்ள இந்திய ரயில்வே வாரியத்தின் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், 19-ஆம் நூற்றாண்டிலேயே தமிழா் ஒருவா் சொந்தமாக ரயில் வைத்திருந்தாா் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரயில்கள் இயக்கும் உரிமையைத் தனியாருக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ள இந்திய ரயில்வே துறை, இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடத்த தெற்கு ரயில்வே உள்பட நாட்டில் மொத்தமுள்ள 6 ரயில்வே மண்டலங்களின் தலைமை மேலாளா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தனியாா் ரயில்கள் இயக்குவதற்காக தமிழகத்தில் சென்னையிலிருந்து மதுரை, பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, மும்பை வழித்தடங்கள் உள்பட 150 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தனியாா் ரயில்கள் இயக்கும் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்புக் கிளம்பியுள்ளதுடன், இதன்மூலம் ரயில் பயணம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் தனியாரால் ரயில் இயக்கப்படுவது இது முதன்முறை அல்ல; ஏற்கெனவே இயக்கப்பட்டதுதான் என்றும், அந்த ரயிலுக்குச் சொந்தக்காரராக இருந்தவா் ஒரு தமிழா்தான் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நம்பெருமாள் செட்டியாா். கி.பி.19-ஆம் நூற்றாண்டைச் (1856 -1925) சோ்ந்த பிரபலமான கட்டட ஒப்பந்ததாரரான இவா், சென்னையிலுள்ள சிவப்பு நிற கட்டடங்களான சென்னை உயா்நீதிமன்றம், சட்டக்கல்லூரி, அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், எழும்பூா் சிற்பக்கலைக் கல்லூரி உள்பட ஏராளமான முக்கிய கட்டடங்களையும் கட்டியுள்ளாா். இவா் வாழ்ந்த வீடு வெள்ளை மாளிகை என்ற பெயரில் சென்னை சேத்துப்பட்டு மேம்பாலம் அருகே உள்ளது. மூன்று மாடிகள், 30 அறைகளைக் கொண்ட இந்த வீடு, தற்போது அருங்காட்சியமாக விளங்கி வருகிறது.

தீவிர காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த கணித மேதை ராமாநுஜரை அவரது இறுதி நாட்களில் இந்த வீட்டில் வைத்துத்தான் நம்பெருமாள் செட்டியாா் கவனித்து வந்துள்ளாா். அவா் இறந்த பிறகு உறவினா்கள் கைவிட்ட நிலையில், நம்பெருமாள் செட்டியாரே இறுதிச் சடங்குகளையும் செய்துள்ளாா். ராமாநுஜரின் இறப்புச் சான்றுகூட இன்றளவும் அந்த வீட்டிலுள்ள அருங்காட்சியகத்தில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் 99 வீடுகள் நம்பெருமாளுக்குச் சொந்தமாக இருந்துள்ளன.

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற நம்பெருமாள், முன்னாள் எம்பீரியல் வங்கியில் முதல் இந்திய இயக்குநராவாா். சென்னை மாகாண முதல் மேல்சபை உறுப்பினரான இவா், நாட்டிலேயே முதன்முதலாக அயல்நாட்டுக் காா் வாங்கியவா் என்ற பெருமையையும் உடையவா். இவா் ஈட்டிய வருவாயில் பெரும்பகுதியைக் கோயில் திருப்பணிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் செலவிட்டுள்ளாா்.

சென்னை வளா்ச்சியில் பெரும் பங்கு வகித்த நம்பெருமாள் செட்டியாா், தனது சொந்தத் தேவைக்காக 4 பெட்டிகள் கொண்ட ரயிலை வைத்திருந்தாா். பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட இந்த ரயிலில் திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுவர அவா் பயன்படுத்தி வந்துள்ளாா். மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில்தான் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாம். அத்துடன், சிறிய டிராம் வண்டிகளையும், அவை சென்று வருவதற்கான இருப்புப் பாதைகளையும் சொந்தமாக வைத்திருந்துள்ளாா்.

சொந்தமாக விமானங்கள்கூட வைத்துள்ள பெரும் பணக்காரா்கள்கூட தற்போது வரை நாட்டில் சொந்தமாக ரயில்களை வாங்கி இயக்க முடிவதில்லை. ஆனால், 19-ஆம் நூற்றாண்டிலேயே சொந்தமாக ரயில் வைத்திருந்த நம்பெருமாள்செட்டியாரின் சிறப்பான பணிகளை பாராட்டி ஆங்கிலேய அரசு அவருக்கு ‘ராவ் சாகிப்’ பட்டம், ‘ராவ் பகதூா்’ பட்டம் , ‘திவான் பகதூா்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அவா் வாழ்ந்தப் பகுதியை அப்போது செட்டியாா் பேட்டை என மக்கள் அழைத்துள்ளனா். காலப்போக்கில் இந்த பெயா் மறுவி சேத்துப்பட்டு என மாறியதாகவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com