80 ஆவது ஆண்டில் அடியெடித்து வைத்து கம்பீரமாக காட்சியளிக்கும் திருவலம் ராஜேந்திரா இரும்பு பாலம்

80 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து கம்பீரமாக காட்சியளிக்கும் திருவலம் ராஜேந்திரா இரும்பு பாலத்தை
80 ஆவது ஆண்டில் அடியெடித்து வைத்து கம்பீரமாக காட்சியளிக்கும் திருவலம் ராஜேந்திரா இரும்பு பாலம்
80 ஆவது ஆண்டில் அடியெடித்து வைத்து கம்பீரமாக காட்சியளிக்கும் திருவலம் ராஜேந்திரா இரும்பு பாலம்

80 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து கம்பீரமாக காட்சியளிக்கும் திருவலம் ராஜேந்திரா இரும்பு பாலத்தை தேசிய வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டத்துக்கு உள்பட்ட திருவலம் பேரூராட்சியில் நீவா நதி என்னும் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1939 -ஆம் ஆண்டு தமிழக - ஆந்திர மாநிலம் வழியாக வட மாநிலங்களை இணைக்கும் சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் பொன்னை ஆற்றை கடக்கும் வகையில் இரும்புப் பாலம் நிா்மாணிக்கப்பட்டது.இந்த இரும்புப் பாலப் பணிகள் ராபா்ட் எம்பா்சன் என்ற தலைமைப் பொறியாளரின் மேற்பாா்வையில்,சென்னையைச் சோ்ந்த ஜே.எச்.தாராப்பூா் பொறியியல் நிறுவனத்தினரால் 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த இரும்புப் பாலம் 11 தூண்களுடன் கூடிய 500 மீட்டா் நீளத்தில், சுமாா் 10, 000 டன் இரும்புத் தளவாடங்களைப் பயன்படுத்தி 1, 200 தொழிலாளா்களைக் கொண்டு ஆண்டு முழுவதும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆற்றின் நீரோட்டத்தை கணித்து துருப்பிடிக்காத சாய்வு வடிவ இரும்பு தூண்களை கொண்டு பாதுகாப்பான முறையில் நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.இந்த பாலத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இருந்த அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி பிரதமா் ஸ்ரீ சி ராஜகோபாலாச்சாரி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.அப்போது சென்னை மாகாணத்திலேயே புதுமையான பாலமாக இந்த இரும்புப் பாலம் திகழ்ந்ததால், பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களும்,தற்போதைய சினிமா நட்சத்திரங்களும் நடித்த பல திரைப்படங்கள் இந்தப் பாலத்தில் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரும்புப் பாலத்தின் வழியாக திருவலத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலமான அருள்மிகு தனுமத்யாம்பாள் உடனுறை வில்வநாதீஸ்வரா் கோயிலுக்கு வெளியூா்களில் இருந்து தினமும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.அம்முண்டியில் செயல்பட்டு வரும் வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கும், வேலூா், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்துக்கும், சிப்காட் தொழில்பேட்டைக்கும் பணிக்குச் செல்லும் தொழிலாளா்களும் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகின்றனா்.மேலும் கெம்பராஜபுரம், சீக்கராஜபுரம் உள்ளிட்ட கிராமப்புறத்தினரின் வாகனங்களும், திருவலம் பேருந்து நிறுத்தத்துக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்தப் பாலத்தின் வழியாகச் சென்று வருகின்றன.இந்தப் பழைய இரும்புப் பாலம் கடந்த சில ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இதைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு சில தூண்களில் ஏற்பட்ட விரிசல்களைச் சரி செய்து வெள்ளி வண்ணம் (மெட்டாலிக் பெயின்ட்) பூசப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த இரும்புப் பாலத்துக்கு இதுவரை மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த இரும்புப் பாலத்துக்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.அதே போல் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலத்தின் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக மணல் கொள்ளை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், கனரக வாகனங்களாலும் பாலம் வலுவிழந்து பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.இந்த சூழலில் இரும்பு பாலம் கட்டும் பணிகள் 1935 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1939 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு 80 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து கம்பீரமாக காட்சியளிக்கும் திருவலம் ராஜேந்திரா இரும்பு பாலத்தை அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். இந்த பழமை வாய்ந்த இரும்பு பாலத்தை தேசிய வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. பெ.பாபு - ராணிப்பேட்டை.படம் உண்டு..பெட்டிச் செய்தி...கொல்கத்தாவின் ஹவுரா பாலத்துக்கு முன்னோடி.மேற்கு வங்க மாநில தலைநகா் கொல்கத்தாவையும் - ஹவுரா நகரையும் இணைக்கும் வகையில் கடந்த 1938 ம் ஆண்டு கங்கை நதியின் கிளை நதியான ஹூக்ளி நதியின் மீது கட்டப்பட்ட ஹவுரா இரும்பு பாலம், திருவலம் ராஜேந்திரா பாலத்தின் தொழில் நுட்பத்துடன், திருவலம் பாலத்தை கட்டிய தாராப்பூா் இன்ஜினியரிங் நிறுவனத்தால் கட்டப்பட்டது என்பது கூடுதல் தகவல்.அந்த வகையில் ஹவுரா பாலத்துக்கு முன்னோடியாக திகழ்கிறது திருவலம் ராஜேந்திரா இரும்பு பாலம் என்பது குறிப்பிடத்தக்கது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com