வேலூர் அருகே ஆந்திர எல்லையில் வியாழக்கிழமை மாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. எனினும், இந்த நிலஅதிர்வால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இருந்து மேற்கு, வடமேற்கு பகுதியில் 50 கி.மீ தொலைவில் ஆந்திர எல்லையோரத்தில் உள்ள பலமநேர் பகுதியில் வியாழக்கிழமை மாலை 3.14 மணிக்கு லேசனா நிலஅதிர்வு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் டிவிட்டரில் வெளியிட்ட தகவலில், 3.5 ரிக்டர் நிலஅதிர்வு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலஅதிர்வால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கர்நாடகம்: தொடர்ந்து 2-வது நாளாக நிலநடுக்கம்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, குடியாத்தம், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே லேசனா நிலஅதிர்வு உணரப்பட்டு வருகிறது. அதன்படி, குடியாத்தம் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலஅதிர்வால் ஒரு வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது.
இதன்தொடர்ச்சியாக வேலூருக்கு அருகே ஆந்திர மாநில எல்லையில் வியாழக்கிழமை மாலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டிருப்பது வேலூர் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் இந்த நிலஅதிர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையிலான நிலஅதிர்வு ஆய்வுக்குழு விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.