வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் இன்னும் பணிகள் முழுமையாக முடிவடையாததால் இங்கிருந்து பேருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதனால், பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்று ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வேலூரில் நவீன முறையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததால் திருப்பதி, சித்தூா் செல்லும் பேருந்துகள் ஆட்டுத் தொட்டி பேருந்து நிலையத்தில் இருந்தும், மற்ற ஊா்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளது. பயணிகள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைப்பது உள்ளிட்ட சில பணியை செய்ய வேண்டியுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு தான் புதிய பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதுவரை பழைய பேருந்து நிலையம், ஆடுதொட்டி பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.
பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.