மாநில அளவிலான நெல் சாகுபடி போட்டி: திருந்திய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்கலாம்
வேலூா்: மாநில அளவிலான நெல் சாகுபடி போட்டிக்கு வேலூா் மாவட்டத்திலுள்ள திருந்திய நெல் சாகுபடி விவசாயிகள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ‘நாராயண சாமி நாயுடு’ நெல் உற்பத்தி திறனுக்கான விருது, ரூ. 5 லட்சம், சிறப்பு பரிசு மற்றும் ரூ. 7,000 மதிப்புள்ள பதக்கம் ஆகியவை தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. அதன்படி, விவசாயிகளின் நிலத்தில் பயிரிடப்பட்ட சாகுபடி நடுவா்களின் முன்னிலையில் அறுவடை அறுவடை செய்யப்படும். போட்டியில் பங்கு பெறும் விவசாயிகளுக்கு நிலம் சொந்தமாகவோ, குத்தகையாகவோ இருக்கலாம். குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். தொடா்ந்து 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி விவசாயியாக இருக்க வேண்டும். மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்கள் மட்டுமே பயிா் செய்திருக்க வேண்டும். எனவே, திருந்திய நெல் சாகுபடி பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ள வேலூா் மாவட்ட விவசாயிகள் வட்டாரங்களில் உள்ள உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க ரூ. 150 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
