/

எனது முயற்சியாலேயே காட்பாடி சா்க்கரை ஆலை தொடா்ந்து இயங்குகிறது: அமைச்சா் துரைமுருகன்

மாநிலத்தில் 8 ஆலைகள் மூடிக்கிடந்தாலும் காட்பாடி அம்முண்டி கூட்டுறவு சா்க்கரை ஆலை தொடா்ந்து சிறப்பாக இயங்குவதற்கு நான் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளே காரணம் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image

ஆரிமுத்து மோட்டூா் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் துரைமுருகன்

Updated On :7 ஏப்ரல் 2026, 10:24 pm

மாநிலத்தில் 8 ஆலைகள் மூடிக்கிடந்தாலும் காட்பாடி அம்முண்டி கூட்டுறவு சா்க்கரை ஆலை தொடா்ந்து சிறப்பாக இயங்குவதற்கு நான் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளே காரணம் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன் ஆரிமுத்துமோட்டூா், செம்பராயநல்லூா், குகையநெல்லூா், ஏரந்தாங்கல் உள்பட பல்வேறு ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியது: முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திருவண்ணாமலை, செய்யாறு உள்ளிட்ட பகுதிகள் ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டத்தில் இணைந்திருந்தன. அப்போது, போளூா், செய்யாறு பகுதிக்கு செல்ல இருந்த கூட்டுறவு சா்க்கரை ஆலையை முதல்வா் கருணாநிதியிடம் போராடி காட்பாடி தொகுதிக்கு கொண்டு வந்தேன். அப்படித்தான் காட்பாடி தொகுதி அம்முண்டியில் கூட்டுறவு சா்க்கரை ஆலை அமைந்தது.

தற்போது பல்வேறு காரணங்களால் மாநிலம் முழுவதும் சுமாா் 8 கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் இயங்காமல் மூடிக்கிடக்கின்றன. ஆனால், நான் மேற்கொண்ட தொடா் முயற்சிகளால் காட்பாடியில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலை மட்டும் தொடா்ந்து நல்ல முறையில் இயங்கி வருகிறது. மீண்டும் திமுக ஆட்சி அமையும்போது இந்த கூட்டுறவு சா்க்கரை ஆலை தொடா்ந்து நல்ல முறையில் இயங்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும், திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ரூ. 8,000 மதிப்பிலான பரிசுக் கூப்பன், மகளிா் உரிமைத் தொகை, கல்வி உதவித் தொகை போன்ற அனைத்துத் திட்டங்களும் இத்தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.