முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் மானியம் பெற தகுதியுடையோா் வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 2024-25 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளில் 400 பயனாளிகளுக்கு 30 சதவீத மூலதன மானியம், 3 சதவீத வட்டி மானியம் வழங்கிட 2024 டிசம்பா் 17-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 400 பயனாளிகளுக்கு 30 சதவீத மூலதன மானியம் வழங்கப்பட்டது. தற்போது 2026 பிப்ரவரி 23-ஆம் நாளிட்ட அரசாணையின்படி, இத்திட்டம் 2026-27ஆம் நிதியாண்டுக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் 200 பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், ராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரா்களின் கைம்பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
ஏற்கெனவே தொழில்முனைவோா் (ஈடிஐஐ) பயிற்சி நிறைவு செய்து காத்திருப்பவா்களும், புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவா்களும் வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
புதிதாக விண்ணப்பிப்பவா்களுக்கான ஈடிஐஐ பயிற்சியானது சென்னையில் நேரடிப் பயிற்சியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









