பிணவறையில் அழுகும் சடலங்கள்

திருப்பூர், ஆக. 18: மாவட்ட அரசு மருத்துவமனை பிணவறைக் கூடத்தில் குளிர்சாதன இயந்திரங்கள் பழுதானதை அடுத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள சடலங்கள் அழுகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளும் சுற
Updated on
1 min read

திருப்பூர், ஆக. 18: மாவட்ட அரசு மருத்துவமனை பிணவறைக் கூடத்தில் குளிர்சாதன இயந்திரங்கள் பழுதானதை அடுத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள சடலங்கள் அழுகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளும் சுற்றுவட்டார மக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

÷திருப்பூர் - தாராபுரம் சாலையிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளாக நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் விபத்துகள், தற்கொலைச் சாவுகள், கொலைகள் உள்ளிட்டவற்றில் இறந்தவர்களின் சடலங்கள் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள பிணவறையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

÷நாளொன்றுக்கு சுமார் 10 சடலங்கள் வரை இங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. அடையாளம் தெரியாமல் உள்ள சடலங்கள் மாவட்ட அரசு மருத்துவமனை பிணவறையில் நாள்கணக்கில் பாதுகாக்கப்படுகின்றன. சில நாட்களுக்குப் பிறகு யாரும் வராதபட்சத்தில், அந்த சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தன்னார்வ அமைப்புகள் மூலம் அடக்கம் செய்யப்படுகின்றன.

÷சடலங்களைப் பாதுகாக்க மருத்துவமனையின் வடபுறத்தில் பிணவறை அமைக்கப்பட்டுள்ளது; அது சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை. அதனால், மருத்துவமனை வரும் நோயாளிகளும், மக்களும் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

÷பிணவறையில் வைக்கப்படும் சடலங்கள் அழுகாமல் பாதுகாக்க 2 குளிர்சாதன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதாகிவிட்டன. இதனால் சடலங்கள் விரைவில் அழுகி மருத்துவமனை வளாகத்தில் பெருமளவில் துர்நாற்றம் வீசுகின்றன.

÷கடந்த சில நாட்களில் வைக்கப்பட்ட 7 சடலங்கள் அழுகி, பிணவறை ஊழியர்களே திணறும் அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகின்றன. பிணவறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை செய்யும் ஊழியர்கள் கதவுகளைத் திறந்துகொண்டு பணிபுரியும் அவலம் ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனை வளாகத்தையும் தாண்டி, அருகிலுள்ள டிஎஸ்கே மரகதம் லேஅவுட், 60 அடி சாலை உள்பட அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

÷நோயைத் தீர்க்க வேண்டிய இடமே நோய் பரப்பும் இடமாக மாறிவருகிறது. மருத்துவமனை நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com