சாயக் கழிவு நீரால் குமுறும்ஒரத்துப்பாளையம் விவசாயிகள்

திருப்பூர், மே 4: உச்சநீதிமன்ற தீóர்ப்பிற்குப் பிறகும் நொய்யலில் சாயக்கழிவுநீர் குறையாமல் செல்வதால் ஒரத்துப்பாளையம் அணை சுற்று வட்டார விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  மாசுக்கட்டுப்ப
Updated on
2 min read

திருப்பூர், மே 4: உச்சநீதிமன்ற தீóர்ப்பிற்குப் பிறகும் நொய்யலில் சாயக்கழிவுநீர் குறையாமல் செல்வதால் ஒரத்துப்பாளையம் அணை சுற்று வட்டார விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 மாசுக்கட்டுப்பாடு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் இதற்கு உரிய தீர்வு காணாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த விவசாயிகள் இணைந்து பெருமளவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

 திருப்பூர் சாயக்கழிவுநீர் பிரச்னை குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீóட்டின் மீது தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் 2010 ஜனவரி 6ம் தேதிக்குப்  பின்னர் நொய்யலில் சாயக்கழிவுநீர் வெளியேற்றக் கூடாதென்றும், அதற்கு முன்னதாகவே பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை பெற்றுவிட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய நஷ்டஈட்டுத் தொகையையும் முழுமையாக செலுத்திவிட வேண்டும் என்றும் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்களுக்கு உத்தரவு வழங்கியது.

 அத் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட 14 பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு உட்பட்ட சாய ஆலைகள் இயங்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் இசைவாணை வழங்கியது. தவிர, நீதிமன்றம் விதித்த உத்தரவின்படி ஜன. 6-க்குள் பொது சுத்திகரிப்பு நிலைய பணிகளை முடிக்காமலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை முழுமையாக செலுத்தாத வகையிலும் இருந்த 100 சாய ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கெயாண்டு மின்இணைப்பை துண்டித்தது. அதன்பின்னர், இப் பணிகளைச் செய்த 26 ஆலைகளின் மீதான நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது.

 இதுதவிர, தனி சுத்திகரிப்பு நிலையங்களுடன் செயல்படும் சாய ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் தொடர்ந்து நொய்யலில் கழிவுநீரை வெளியேற்றி வந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட 27 ஆலைகளும் மூடப்பட்டன. இவ்வாறு உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிந்த போதிலும் நொய்யல் ஆற்றில் வெளியேறும் சாயக்கழிவுநீர் தொடர்ந்து சென்றுகொண்டே இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.  அதன்படி, ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் நீரில் உப்புத்தன்மை சிறிதளவும்

குறையாமல் வந்துகொண்டே இருப்பதாகவும் அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, ஒரத்துப்பாளையம் மாசுநீரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் குழந்தைசாமி கூறியது:

 உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜன. 6ம் தேதிக்குப் பிறகு நொய்யலில் சாயக்கழிவுநீர் கலக்காத தூய்மையான நீரே வரும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். மாறாக, முன்பு வந்ததைப் போலவே தொடர்ந்து நொய்யலில் சாயக் கழிவுநீர் கலந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்

முறைப்படி கண்காணிப்பு செய்யாததே காரணம்.

 இதனால், இசைவாணை பெற்ற பொதுசுத்திகரிப்பு நிலையங்களில் இருந்தும், தனி சுத்திகரிப்பு நிலையத்தினரும் தொடர்ந்து கழிவுநீரை வெளியேற்றிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து மாசுக்கட்டுóப்பாடு வாரியத்திடம் புகார் தெரிவித்தாலும் அலுவலகத்தில் போதிய அலுவலர் பற்றாக்குறை நிலவுவதாக கூறுவது நியாயமாக இல்லாததுடன்,

நீதிமன்ற உத்தரவையே அவமதிப்பதாகவும் இருக்கிறது.

 எனவே, இப்பிரச்னையில் மாநில அரசு உரிய கவனம் செலுத்தி நொய்யலில் சாயக்கழிவுநீர் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் திருப்பூரில் பெருமளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

 இதுகுறித்து திருப்பூர் மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணன் கூறுகையில்,  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும் அவ்வப்போது வெளியில் இருந்து அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்படுகிறது. அதன்படி, நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து நொய்யலில் வெளியேறிய கழிவுநீரின் உப்புத்தன்மை 7000 டிடிஎஸ்-லிருந்து சுமார் 3,500 டிடிஎஸ்-ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து நடத்தப்படும் ஆய்வின்மூலம் விரைவில் முழுமையாக அதன் நச்சுத்தன்மையை குறைக்க முடியும்.

 மேலும், சுத்திகரிப்பு நிலையங்களிலும் முழுமையாக கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதில் தொழில்நுட்பரீதியாக பல பிரச்னைகள் இருக்கின்றன.  அவை சிறிதுசிறிதாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி முழுமையாக இப்பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட சிறிதுகாலம் ஏற்படும். இதுகுறித்து, மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில்

நீதிமன்றத்துக்கும் அறிக்கை தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

 சாயக்கழிவுநீரால் பாதிக்கப்படும் நொய்யலின் தொடர்ச்சியான பாதிப்புகளை தவிர்க்க மாநில அரசு ஏற்கனவே அறிவித்த கழிவுநீரை குழாய்கள் மூலம் கடலுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அதன்மூலமே இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com