பெ.நா.பாளையம், ஜன. 8: விருப்பு வெறுப்பற்ற நிலையை எய்திட மனதைப் பண்படுத்துவதே தியானத்தின் முக்கிய கோட்பாடு என்று, பகவத்கீதை விளக்கியுள்ளதாக, சுவாமி சின்மயானந்தாவின் சீடர் சுவாமி சுஷாந்த் தெரிவித்தார்.
கோவை சின்மயா மிஷன் சார்பில், பகவத்கீதையின் தியான விளக்க உரைகள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி தொடக்க விழா, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜெயந்தி திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடந்தது.
நிகழ்ச்சிக்கு அரங்கசாமி நாயுடு அறக்கட்டளைத் தலைவர் ர.நாரயாணசாமி நாயுடு தலைமை வகித்தார். சித்ரா பாலசுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் தியானம் குறித்து சுஷாந்த் பேசியது:
தியானம் என்பது கெட்ட எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணிக் கொண்டிருப்பதுவே ஆகும். குறிப்பாக துன்பமயமான எண்ணங்கள் மனதைவிட்டு அகல வேண்டும். அதை அகற்ற ஒரே வழிதான் தியானம்.
பிரச்னைகள் இல்லாத மனிதனில்லை. அவற்றை தீர்த்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய மனநிலையை உருவாக்கிக் கொள்வதே முக்கியம். தேனீயானது மகரந்தத்தை மட்டும் உறிஞ்சும். அதுபோல மனிதனும் நல்ல எண்ணங்களை மட்டுமே கிரஹித்துக் கொள்கின்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தியானத்தின் முக்கிய படிநிலைகளான மனசாந்தி, ஒருமுகப்படுத்துதல், விரிந்த அறிவைப் பெறுதல் ஆகியவற்றை நம்மால் பெற முடியுமானால், பண்பட்ட மனிதராகலாம்.
வெறுமனே பூஜை செய்வதற்காக பகவத்கீதை படைக்கப்படவில்லை. அதிலுள்ள தத்துவக் கருத்துக்களை எளிதாக அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். அதன்படி நடந்தால் நிறைவான மனிதராகலாம் என்றார்.
துவக்க நிகழ்ச்சியில் பாலமலை பக்தர் குழுவின் செயலாளர் சின்னராஜ், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெ.நா.பாளையம் வட்டார நிர்வாகி எஸ்.வி.பழனிசாமி, புதுப்புதூர் ராமாநுஜக்கூடத்தின் செயலாளர் நாராயண ராமனாநுஜதாசன், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வரும் 11ம் தேதி வரை இச்சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் அபிராமி கதிரேசன் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.