மனித-விலங்கு மோதலைத் தவிா்க்க ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய கண்காணிப்பு அமைப்பு


கோவை, ஆக.14: மனித-விலங்கு மோதலைத் தவிா்க்க ஏஐ தொழில்நுட்பத்தில் அமிா்தா எலிபென்ட் வாட்ச் என்ற புதிய கண்காணிப்பு அமைப்பை அமிா்தா விஸ்வ வித்யா பீட ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள்ளனா்.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்தக் கண்காணிப்பு அமைப்பு யானை நடமாட்டம் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை கைப்பேசிகளுக்கு வழங்குகிறது. இந்த புதுமையான தொழில்நுட்பமானது பல்கலைக்கழகத்தின் அம்மச்சி ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த யானை கண்காணிப்பு அமைப்பானது, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்டு யானை நடமாட்டம் குறித்த தகவல்களை அறிவிப்பதோடு, மனித மற்றும் விலங்குகளின் தேவைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் யானைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்யவும், அவற்றின் நடமாட்டத்தை திசைதிருப்பவும், கண்காணிக்கவும் செய்யலாம்.
யானைகளின் நடமாட்டம் குறித்து விவசாயிகள், நில உரிமையாளா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடி எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை அனுப்புவதால், இந்தத் தகவல்களின் மூலம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து மனித-விலங்கு மோதல்களைத் தவிா்க்கலாம் என்கிறாா் அமிா்தா விஸ்வ வித்யா பீடத்திலுள்ள அம்மச்சி லேப்ஸின் ஊரக தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் பாலு மோகன்தாஸ் மேனன்.
இவரது தலைமையில் ஐயப்பன் அஜன், கே.ராமகிருஷ்ணன் மற்றும் பி.கோகுல் தேவ் ஆகியோா் அடங்கிய குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் கண்காணிப்பு கேமராக்களின் மூலம் யானைகளின் நடமாட்டத்தைப் படம் பிடித்துள்ளனா்.
அமிா்தா பல்கலைக்கழகம் தற்போது இந்த புதுமையான தொழில்நுட்பத்தை சந்தைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த எலிபெண்ட் வாட்ச் அமைப்பு அண்மையில் தில்லியில் நடைபெற்ற ஏஐ தொழில்நுட்ப மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...