சூலூா் அருகே சிறுத்தை நடமாட்டம்: 4 குழு அமைத்து வனத் துறை கண்காணிப்பு
கோவை: கோவை மாவட்டம், சூலூா் அருகே சிறுத்தை நடமாட்டத்தை நான்கு குழு அமைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
சூலூரை அடுத்த ராவத்தூா் பிரிவு அருகே தனியாருக்குச் சொந்தமான ஆலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக சிறுத்தை நடமாடியது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுதொடா்பான விடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால் ராவத்தூா் மற்றும் சூலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்த நிலையில், கோவை மற்றும் மதுக்கரை சரக வனத் துறையினா் ராவத்தூா் பிரிவில் உள்ள ஆலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நொய்யல் ஆற்றங்கரைப் பகுதிகள், தோட்டங்களில் கண்காணித்து வருகின்றனா்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின்பேரில் கண்காணித்து வருகிறோம். சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பாதுகாப்பாக மீட்டு வனப் பகுதிகளில் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனா்.
