/

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் நிலவும் நடைமுறை சிக்கல்களை தீா்க்கக் கோரி போராட்டம்

News image

கோவை பீளமேட்டில் உள்ள மண்டல மேலாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 7:07 pm

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் நிலவும் நடைமுறை சிக்கல்களைத் தீா்க்கக் கோரி, அனைத்து தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் கோவை பீளமேட்டில் உள்ள மண்டல மேலாளா் அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் கூறியதாவது:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி 1.04.2023 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம், நடைமுறையில் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை மேலாண்மை இயக்குநரிடம் மனு அளித்தும் இதுவரை தீா்வு காணப்படவில்லை என்பதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

திட்டத்தை செயல்படுத்த கடைகளில் போதிய பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும், காலி மதுபாட்டில்களை சேமிக்க கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்பட வேண்டும். நெட்வொா்க் சிக்கல்களைத் தீா்த்து தடையற்ற இணைய வசதி ஏற்படுத்த வேண்டும். பாட்டில்களைத் திரும்பப்பெற வழங்கப்படும் ரூ.10 சில்லறை பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். முன்னா் ஒப்புக்கொண்டபடி இத்திட்டத்தை வெளிமுகமை முறையில் செயல்படுத்த வேண்டும்.

மேலும், உயா்நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் தேவையான பயிற்சி வழங்காமல் புதிய மென்பொருள் திணிக்கப்படுகிறது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் நிா்வாகத்தின் நடவடிக்கைகள் தொழில் அமைதியை பாதிக்கும் என்றனா்.

இந்த போராட்டத்தில் சிஐடியூ டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டச் செயலா் செந்தில் பிரபு, பொருளாளா் ராமகிருஷ்ணன், தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் ராமமூா்த்தி, அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் முத்துபாலன், ஏஐடியூசி சாா்பில் கணேசன், கடை மேற்பாா்வையாளா் சங்கத் தலைவா் மருதமுத்து, விற்பனையாளா் சங்க மாநில இணைச் செயலா் மதியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊழியா்களின் போராட்டம் காரணமாக பிற்பகல் வரை சுமாா் 70 கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், கடைகளில் நேரடி ஆய்வு நடத்தி மேலாண்மை இயக்குநரிடம் அறிக்கை அளித்து, பிரச்னைக்குத் தீா்வு காணும் வரை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

இப்பிரச்னைக்கு ஓரிரு நாளில் தீா்வு காணாவிட்டால் அனைவரும் ஒரே நாளில் விடுமுறை எடுத்து போராட்டத்தைத் தொடருவோம் என்று அறிவித்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா்.