சூலூரில் 200 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
சூலூர் வட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் சூலூர் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனர்.
இதில், சூலூர் எஸ்.வி.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறியதாவது:
சூலூர், எஸ்.வி.கே. நகர் விநாயகர் கோயில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் 200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தபோது உண்ணா ராம் (32) என்பவர் அந்த வீட்டில் குடியிருந்து வருவதாகவும், அவர் தற்போது குடும்பத்துடன் ராஜஸ்தான் சென்றிருப்பதாகவும் கூறினார்.
வீட்டிலுள்ள அறையை பூட்டி சீல் வைத்துள்ளோம். கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருள்களின் மாதிரியை சேகரித்து மதுரையிலுள்ள பகுப்பு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆய்வகத்தில் இருந்து பெறப்படும் முடிவின்பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








