லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆ.கணபதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேடுகளுக்கு உதவியதாக தொலைநிலை கல்விக் கூட இயக்குநர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆ.கணபதி (67), பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் டி.சுரேஷ் (41) என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவருடன், வேதியியல் துறை பேராசிரியர் என்.தர்மராஜூம் கைது செய்யப்பட்டார். தனது தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்வதற்காகத் துணைவேந்தர் ரூ.30 லட்சம் கேட்பதாக டி.சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் சுமார் 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்விக் கூட இயக்குநர் (பொறுப்பு) மதிவாணன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7-இன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மேலும் சிலர் கைது? லஞ்சம் கொடுத்து பேராசிரியர்கள் பணியில் சேர்ந்த விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.