கோவை மாவட்ட நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் முகநூல் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட தொண்டரணித் தலைவர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பி.பெருமாளிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைமை தொண்டரணி என்ற பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி நடத்தி வருகிறோம். இந்தப் பக்கத்தை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், இந்த முகநூல் பக்கமும், எனது தனிப்பட்ட முகநூல் கணக்கும், விசார்ட் ஸ்குவாட் என்ற வங்கதேச கணினி ஹேக்கிங் குழுவால் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் முடக்கப்பட்டது. தற்போது, அப்பக்கத்தை நிர்வகிப்பவர்களாக வடமாநிலங்களைச் சேர்ந்த சிலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், எனது பெயரில் தினமும் ஒரு முகநூல் கணக்கு திறக்கப்பட்டு அதில் இருந்து எனது நண்பர்களுக்கு நட்பு அழைப்பும், குறுஞ்செய்திகளும் அனுப்பப்படுகிறது.
அவ்வாறு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கணக்கில் இருந்து வெளிவரும் செய்திகள், புகைப்படங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, எங்களது தொண்டரணி முகநூல் பக்கத்தையும், எனது தனிப்பட்ட கணக்கையும் மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.