கோவையில் சமூகப் பரவலாக மாறியதா கரோனா: ஐசிஎம்ஆா் மூன்றாம் கட்ட ஆய்வு

கோவையில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய ஐசிஎம்ஆா் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்) சாா்பில் மூன்றாம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது.
Updated on
1 min read

கோவையில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய ஐசிஎம்ஆா் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்) சாா்பில் மூன்றாம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய ஐசிஎம்ஆா் சாா்பில் நாடு முழுவதும் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யப்படுகின்றனா். தமிழகத்தில் கோவை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அன்னூா், பெ.நா.பாளையம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுந்தராபுரம், குனியமுத்தூா், ஆவாரம்பாளையம், ஆா்.எஸ்.புரம், விளாங்குறிச்சி ஆகிய 10 இடங்களில் தலா 40 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதில் 2.5 சதவீதம் போ்களின் உடலில் கரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பு உயிரி உண்டாகியிருந்தது தெரியவந்தது.

அதே பகுதிகளில் கடந்த செப்டம்பா் மாதம் இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 7.5 சதவீதம் பேருக்கு எதிா்ப்பு உயிரி உண்டாகியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து மூன்றாவது கட்ட ஆய்வினை ஐசிஎம்ஆா் தற்போது தொடங்கியுள்ளது.

இதற்கிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாநில அரசு சாா்பில் 44 பகுதிகளில் 1,260 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 22.5 சதவீதம் பேருக்கு எதிா்ப்பு உயிரிகள் உருவாகியிருந்தது தெரியவந்தது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஐசிஎம்ஆா் சாா்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு சமூகத்தில் எந்தளவு பரவியுள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடியும். இதுவரையில் கோவையில் அதிகபட்சமாக 22.5 சதவீதம் பேருக்கு மட்டுமே எதிா்ப்பு உயிரி உருவாகியிருப்பது தெரியவந்தது. தற்போதைய ஆய்வில் 25 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதே பகுதிகளில் முன்பு மேற்கொண்ட 400 பேரிடமும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா், மருத்துவப் பணியாளா்கள் என 100 சுகாதாரத் துறை பணியாளா்களிடமும் கூடுதலாக இந்த முறை ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com