வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது குறித்து கோவை மண்டல விவசாயிகளிடம் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை கருத்துகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பல்கலையில் உள்ள நூற்றாண்டு கட்டடத்தை பார்வையிட்டு, வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். இதையடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட வேளாண்மைத் தொழில்நுட்பங்களை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர், 2021-2022 ஆம் ஆண்டு வேளாண் தனிநிதி நிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கத்தினர் என பலர் பங்கேற்றனர். நிதி நிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்த அவர், இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக பழத்தோட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் பயிர் வளர்ச்சியூக்கிகள் மற்றும் பூச்சி மருந்து தெளித்தல் பற்றிய செயல் விளக்கத்தைப் பார்வையிட்டார்.
இதில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, வேளாண் இயக்குநர் அண்ணாதுரை, வேளாண் விற்பனை துறை இயக்குநர் வள்ளலார், பல்கலைக்கழக துணை வேந்தர் நீ.குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.