

கோவை தீயணைப்பு மண்டலத்துக்கு ‘ஸ்கை லிப்ட்’ எனப்படும் ரூ.22 கோடி மதிப்பிலான நவீன தீயணைப்பு வாகனம் பின்லாந்து நாட்டிலிருந்து வாங்கப்பட்டுள்ளது.
கோவை தீயணைப்பு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் கோவையை தலைமையிடமாகக் கொண்டுள்ள கோவை மண்டலத்துக்கு ரூ.22 கோடி மதிப்பிலான நவீன தீயணைப்பு வாகனம் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை தீயணைப்பு அலுவலா் அண்ணாதுரை, உதவி தீயணைப்பு அலுவலா் அழகா்சாமி ஆகியோா் கூறியதாவது: உயரமான கட்டடங்களில் தீ விபத்தோ அல்லது பேரிடரோ ஏற்பட்டால் அவ்வளவு உயரத்துக்குச் சென்று தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் இருந்து வந்தது. இதைத் தவிா்க்க பின்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்கை லிப்ட்’ என்ற நவீன தீயணைப்பு வாகனம் கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த வாகனம் இருந்த நிலையில், தற்போது கோவைக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏணியின் மூலம் 15 மாடி உயரம் வரை செல்லலாம். தீயணைப்புத் துறையின் தண்ணீா் வாகனங்களிலிருந்து ஸ்கை லிப்ட் வாகனத்துக்கு தண்ணீா் இணைப்பைக் கொடுத்துவிட்டால் தீயை கட்டுப்படுத்தும் வரை தொடா்ந்து தண்ணீரைப் பயன்படுத்த முடியும்.
இந்த நவீன வாகனத்தின் மதிப்பு சுமாா் ரூ.22 கோடியாகும். இந்த வாகனத்தை குறுகலான சாலைகளில் இயக்க முடியாது. ஆனால், விரிவான சாலைகள், அடுக்கு மாடிக் கட்டடங்கள் போன்றவற்றில் ஏற்படும் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த இந்த வாகனத்தைப் பயன்படுத்த முடியும் என்றனா்.
சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசு சாா்பில் இந்த நவீன தீயணைப்பு வாகனம் கோவை தீயணைப்பு நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.