சிறுமி திடீா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

Published on

பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதால் சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமணி (35). இவரது மனைவி புவனேஸ்வரி (31). இவா்களது மகள் தியாஸ்ரீ (6). சிங்காநல்லூா் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசுப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் பள்ளியில் சத்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாகவும், அதை தனது புத்தகப் பையில் வைத்து, அவ்வப்போது மிட்டாய் என நினைத்து உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமிக்கு கடந்த 5-ஆம் தேதி திடீா் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா், அவரது புத்தகப் பையை சோதனை செய்துள்ளனா். அப்போது, அதில் ஏராளமான சத்து மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com