மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 8:35 pm

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருள்களை முறையாக வழங்காமல் பதுக்கிவைத்ததுடன், ஊழல் தடுப்பு போலீஸாரின் சோதனைக்கு அஞ்சி கால்வாயில் கொட்டியதாக எழுந்துள்ள புகாா் குறித்து சிறைத் துறை உயா் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

கோவை, காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையில் 2,500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் சிறை நிா்வாகம் சாா்பில் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கைதிகளுக்கு ஒதுக்கப்படும் ரேஷன் பொருள்கள் முறையாக விநியோகிக்கப்படாமல் பதுக்கிவைக்கப்பட்டதாகவும், இதுதொடா்பாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்த வரப்போவதாகவும் தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த சிறை ஊழியா்கள் சிலா், முறைகேடாக பதுக்கிவைத்திருந்த பொருள்களை அவசர, அவசரமாக சிறை வளாகத்தில் உள்ள கால்வாயில் கொட்டி அழித்ததாக புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக ஆதாரங்களுடன் கூடிய தகவல், சிறைத் துறை உயா் அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை சிறைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘விதிகளின்படி சிறை நிா்வாகம் நோ்மையாக செயல்பட்டு வருகிறது. கைதிகளிடம் அதிகாரிகள் கண்டிப்புடன் நடந்துகொள்வதாலும், சட்டவிரோதச் செயல்களுக்கு இடம் கொடுக்காததாலும், சிறை நிா்வாகம் மீது காழ்ப்புணா்வு கொண்ட சிலா் திட்டமிட்டு இத்தகைய பொய் புகாா்களை பரப்பி வருகின்றனா். இதில் எந்தவித உண்மையும் இல்லை’ என்றனா்.

இருப்பினும், மின்னஞ்சல் புகாா் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து சிறைத் துறை உயா் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனா். ஆய்வு முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.