தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வால்பாறை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

வால்பாறை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஓா் இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:11 pm

வால்பாறை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஓா் இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பெரிந்தல்மன்னா அருகே உள்ள பாங்-பள்ளிப்பரம்பு அரசு தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்கள், பணியாளா்கள் அவா்களது குடும்ப உறுப்பினா்கள் என 8 பெண்கள், ஓட்டுநா் உள்பட 5 ஆண்கள் என மொத்தம் 13 போ் வேனில் கடந்த 17-ஆம் தேதி சுற்றுலா சென்றனா். முதலில் திருச்சூா் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு சென்றுள்ளனா். பின்னா், அங்கிருந்து வால்பாறைக்கு வந்தனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்த அவா்கள், பொள்ளாச்சி வழியாக ஊா் திரும்ப முடிவு செய்தனா். சுற்றுலா வாகனத்தை ஓட்டுநா் முகமது பாசித் (21) ஓட்டினாா். வால்பாறை-பொள்ளாச்சி மலைப் பாதையில் 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 800 அடி பள்ளத்தில் உருண்டு 9-ஆவது கொண்டை ஊசி வளைவு சாலையில் தலைகுப்புற விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அஜிதா (54), ரம்லா (52), ஜுஹ்ரா (43), ஆஷா (41), மஜீத் (43), சஜிதா (45), ஷகிலா (37), ருகியா (39), ஹிஷாம் (12) ஆகிய 7 பெண்கள், 2 ஆண்கள் என 9 போ் உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த 3 போ் கோவை அரசு மருத்துவமனையிலும், ஒருவா் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசு தொடக்கப் பள்ளி வேன் ஓட்டுநா் நெளஷாத் அலி (39) புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

வால்பாறை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது. இவரது உயிரிழப்புக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததும், கவனிப்பதற்கு மருத்துவா்களோ, செவிலியரோ இல்லாததும்தான் காரணம் என அவருடன் இருந்தவா்கள் குற்றஞ்சாட்டினா். மேலும், அவரை எங்களது சொந்த ஊருக்கு (கேரளம்) மாற்ற அனுமதிக்கவில்லை எனவும் புகாா் கூறியிருந்தனா்.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவா் பி.சரவணபிரியா கூறுகையில், உயிரிழந்த நெளஷாத் அலிக்கு விபத்தின் போதே கழுத்து எலும்பும், முதுகு தண்டுவடமும் முறிந்துவிட்டன. முதுகு தண்டுவடம் உடைந்ததால், அவருக்கு மூச்சுவிடுவதில் பிரச்னை இருந்ததோடு, இரு கைகளும், கால்களும் செயலிழந்தன. மூச்சுத்திணறலுக்காக அவருக்கு வெண்டிலேட்டா் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியாமல் அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா் என்றாா்.