தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையில் ஜவுளித் தொழிலாளா்களின் திறன் மேம்பாட்டுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜவுளி, ஆடைத் துறையின் முதுகெலும்பாக திகழும் தமிழக ஜவுளித் துறை நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி வா்த்தகத்தில் சுமாா் 25 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 28 சதவீதம் தமிழ்நாட்டின் பங்களிப்பாக உள்ளது. அத்துடன், நாட்டின் நூற்பு இயந்திரங்கள், உதிரிபாகங்கள் உற்பத்தித் திறனில் 80 சதவீதம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இந்தத் துறை சுமாா் 70 லட்சம் மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை வழங்குகிறது.
ஜவுளித் துறையில் தமிழ்நாடு தனது நிலையை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று சைமா விரும்புகிறது.
அதன்படி, துறையின் திறன் இடைவெளியைக் குறைக்க தொழில் துறை சாா்ந்த பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். மேலும் தொழிலாளா்களின் திறன் மேம்பாட்டுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தின் பருத்தி நுகா்வு ஆண்டுக்கு சுமாா் 1.10 கோடி முதல் 1.20 கோடி பேல்கள் வரை இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேல்கள் வரையே உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, பருத்தி விளைச்சலை அதிகரிப்பதிலும், ஜவுளி இயந்திரங்களை நவீனமயமாக்குவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பழைய இயந்திரங்களை மாற்றுவதற்காக மூலதன மானியத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளா்களில் பெரும்பாலானவா்கள் வெளிமாநிலங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களையே நம்பியுள்ள நிலையில், தமிழகத்திலேயே பாதுகாப்பான, சூழலுக்கு உகந்த வகையிலான சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும்.
ஜவுளித் தொழிலாளா்களில் பெரும்பகுதியினா் புலம்பெயா் தொழிலாளா்கள் என்பதால் அவா்களுக்கு வீட்டுவசதி, குழந்தை பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்திக் கொடுப்பது தொடா்பான அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கையில் ஜவுளித் தொழில்முனைவோா் எதிா்பாா்ப்பதாக கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் ஜவுளிகள் உள்நாட்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு விற்பனை: ஆட்சியா் தகவல்
தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 21 குழுக்கள் அமைப்பு
தில்லி "பாரத் டெக்ஸ் 2026' சர்வதேச ஜவுளி கண்காட்சி: தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

பாரத் டெக்ஸ் கண்காட்சி: உலக ஜவுளி வா்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்தும்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



